நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை மீளப் புதுப்பித்துள்ளது. இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, புலத்கொகுபிட்டிய ஆகிய பகுதிகளும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட, பெல்மதுல்ல, கிரியெல்ல, எலபாத்த, கலவானை மற்றும் நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் அவதானத்துடன் இருக்க வேண்டிய விழிப்புணர்வுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, பாதுக்க, கம்பஹாவின் அத்தனகல்ல, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புலத்சிங்கள, ஹொரண, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் நுவரெலியாவின் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவிற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படின் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
