சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாவின் மதிப்பு, வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க டொலருக்கு நிகராக 2.7 வீதத்தால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ‘Bloomberg’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் ரூபா பதிவு செய்த மிகப்பெரிய ஒருநாள் வளர்ச்சியாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அன்றைய தினம் ஆசியாவிலேயே மிகச் சிறந்த முறையில் செயல்பட்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து இலங்கைக்கு நிதி கிடைக்கவுள்ள நிலையில், சந்தையிலுள்ளவர்கள் தங்களிடமுள்ள டொலர்களை விற்பனை செய்ய முற்பட்டதே ரூபா வலுவடைவதற்குக் காரணம் என அரசாங்கம் தெரிவிப்பதாக அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூபாவின் மதிப்பை ஸ்திரப்படுத்துவதற்காகத் தனிப்பட்ட வாகன இறக்குமதியின் மீது கூடுதல் கட்டணத்தை விதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ‘Bloomberg’ இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
