இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த 8.46 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கரையோர காவல் படையினர் திங்கட்கிழமை (25) மாலை கைப்பற்றியுள்ளனர்.
இலங்கைக்கு படகுகள் மூலம் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய கரையோர காவல் படையினர் மண்டபம், வேதாளை மற்றும் சீனியப்பா தர்கா கடற்கரைப் பகுதிகளில் ஹோவர்கிராப்ட் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சரக்கு வாகனத்தில் இருந்து படகிற்கு பெட்டிகள் ஏற்றப்படுவதை அவதானித்த அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதிகாரிகள் அணுகியதை தொடர்ந்து, படகில் இருந்த இருவர் கடல் வழியாக தப்பிச் சென்றதுடன், கரையில் இருந்தவர்கள் பெட்டிகளை வீசிவிட்டு வாகனத்துடன் தப்பியோடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடற்கரையில் கைவிடப்பட்டிருந்த 12 பெட்டிகளை மீட்ட இந்திய கரையோர காவல் படையினர் அவற்றை மண்டபம் கரையோர காவல் முகாமிற்கு கொண்டு சென்று சோதனை செய்தபோது, சுமார் 8.46 இலட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வகை வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கையில் கொக்கைன், ஹெரோயின் மற்றும் மெத்தாம்பெட்டமின் போன்ற போதைப்பொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு இவ்வகை மாத்திரைகள் அதிகளவில் கடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
