மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள யூனியன் வங்கி (Union Bank) கிளையில் இன்று (30) அதிகாலை 6.00 மணியளவில் திடீரென தீ விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.
வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட பிராந்தியவாசிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதிகாலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாததால் பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

மின்சார ஒழுக்கு (Short Circuit) காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. விபத்தினால் ஏற்பட்டுள்ள சொத்து விபரங்கள் மற்றும் சேத விபரங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

