டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அதற்கு நிகரான பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (02) ஒன்றுகூடவுள்ளனர்.
இன்றைய கலந்துரையாடலின் பின்னர், பஸ் சேவைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விசேட கலந்துரையாடலுக்காக அனைத்து பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளும் இன்று காலை ஒன்றுகூடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது குறித்து கெமுனு விஜேரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய கூட்டத்தில் தங்களது சங்கப் பிரதிநிதிகளும் ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். குறிப்பாக, இந்த எரிபொருள் பிரச்சினையிலிருந்து தங்களது தொழில்துறையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தே பிரதானமாக ஆராயவுள்ளோம்.
அரசாங்கத்தின் தரப்பிலிருந்து இதற்கு முறையான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்ட கொள்கையிலேயே இருக்கின்றார்கள்.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் இந்தத் தொழில்துறையை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாது என்பதால், பஸ் சேவைகளில் இருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பஸ் உரிமையாளர்களும் ஏகமனதாகத் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், ஒரு சங்கமாக பிரதானிகளுடன் கலந்துரையாடி எமது இறுதித் தீர்மானத்தை இன்றைய தினமே அறிவிப்போம் என குறிப்பிட்டார்.
