ஹொரணை – அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் இயங்கி வந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது.
தீ விபத்தில் படுகாயங்களுடன் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், இன்று (05) வெள்ளிக்கிழமை மற்றுமொருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
இந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நீர் மோட்டார் மற்றும் மல்டி பிளாக் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 80 மெத்தைகளில் தீ பரவியதே இந்த விபத்திற்கு காரணம் என அரச ரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தேவிபத்தின் போது வளாகத்தில் இருந்த 70 நோயாளர்களின் 52 பேர் பொதுமக்கள் மற்றும் போலீசாரால் காயங்கள் இன்றி மீட்கப்பட்டன எனினும் 10 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிர் இழந்ததுடன் வைத்தியசாலைகள் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மீட்கப்பட்டவர்கள் இராணுவ உதவியுடன் கல்பாத்த பகுதியில் உள்ள மாற்று இல்லத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உப்பாலி பன்னிலகே, இந்த முதியோர் இல்லம் எந்த ஒரு அரசு நிறுவனத்தாலும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்
இதனை அடுத்து பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இல்லத்தின் பணிப்பாளரை ஜூன் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொரளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பொலிஸார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
