கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் நன்னீர் மீனவர் சங்கத்தின் கீழ் உள்ள புதுமுறிப்பு குளத்தில் 27,300 மீன் குஞ்சுகள் இன்று (05) விடப்பட்டன.
சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மீன் குஞ்சுகள், நன்னீர் மீனவர்களின் உற்பத்தியை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் குளத்தில் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான இறால் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த வாரம் சுமார் ஒரு இலட்சம் இறால் குஞ்சுகளும் புதுமுறிப்பு குளத்தில் விடப்பட்டிருந்ததாக மீனவர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
சமீபத்தில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் பல நன்னீர் மீன்பிடி குளங்கள் சேதமடைந்ததுடன், மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நன்னீர் மீனவர்களின் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க விசேட நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
