உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி முன்வைத்த நேரடி பேச்சுவார்த்தை அழைப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிராகரித்துள்ளார். அதேவேளை, டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றுவது உள்ளிட்ட ரஷ்யாவின் போர் நோக்கங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய புட்டின், ஜெலன்ஸ்கி அனுப்பிய திறந்த கடிதத்தை “மரியாதையற்றது” என விமர்சித்தார்.
கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், சுவிற்சர்லாந்து அல்லது துருக்கி போன்ற நடுநிலை நாட்டில் இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜெலன்ஸ்கி முன்மொழிந்திருந்தார்.
மேலும், தற்போதைய போர்க்கள நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு இராஜதந்திர பேச்சுகளை ஆரம்பிக்கலாம் என்றும், பேச்சுவார்த்தை காலத்தில் முழுமையான போர்நிறுத்தத்திற்கு உக்ரைன் தயாராக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட புட்டின், “இவ்வாறான சந்திப்பு தற்போது எந்த பயனையும் தரும் என நான் கருதவில்லை. இந்தக் கடிதம் உண்மையில் சந்திப்பை ஏற்படுத்துவதற்காகவா அல்லது அது நடைபெறாமல் தடுக்கவா எழுதப்பட்டது என்ற சந்தேகம் உள்ளது. எங்கள் இராணுவம் தனது பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கும்” என தெரிவித்தார்.
மேலும், லுஹான்ஸ்க் பிராந்தியம் முழுவதும் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 85 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறிய அவர், கெர்சன் மற்றும் சப்போரிஷியா மாகாணங்களையும் உக்ரைன் முழுமையாக கைவிட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சமீபத்திய இராணுவச் சவால்கள் மற்றும் கிரிமியாவுக்கான விநியோக வழித்தடங்கள் மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில் இந்த அமைதி முன்மொழிவு அனுப்பப்பட்டிருந்தது.
மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் எண்ணெய் முனையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதுடன், மரியுபோல் மற்றும் பெர்டியன்ஸ்க் துறைமுகங்களில் இராணுவ எரிபொருட்களை ஏற்றிச் சென்ற ஐந்து ரஷ்ய சரக்குக் கப்பல்களும் உக்ரைனின் ஆளில்லா தாக்குதலில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அஜர்பைஜானைச் சேர்ந்த ஐந்து மாலுமிகள் உயிரிழந்ததாக ரஷ்யா கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, “ரஷ்யா மீண்டும் போரையே தேர்வு செய்துள்ளது. இது பலவீனமான பதிலாகும்” என்று விமர்சித்துள்ளார்.
