நுகேகொடையில் அமைந்துள்ள முன்னணி உணவுப் பொருள் விநியோக நிறுவனமொன்றுக்கு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) அதிகாரிகள் கடந்த ஜூன் 4 ஆம் திகதி நுகேகொடையின் பகோடா வீதியில் அமைந்துள்ள Asriel Marketing (Pvt) Ltd நிறுவனத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் அடிப்படையில், கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, காலாவதியான உணவுப் பொருட்களை காலாவதியாகாத பொருட்களுடன் சேர்த்து களஞ்சியப்படுத்தியமை, இறக்குமதியாளர் அல்லது விநியோகஸ்தரின் விவரங்கள் குறிப்பிடப்படாத பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை மற்றும் நுகர்வோர்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் செயல்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டன.
வழக்கின் உண்மைகள் மற்றும் சாட்சியங்களை பரிசீலித்த நீதிமன்றம், நிறுவனத்திற்கு ரூ.75,000 அபராதம் விதித்ததுடன், வழக்குடன் தொடர்புடைய உணவுப் பொருட்களின் கையிருப்பை அழிக்கவும் உத்தரவிட்டது.
இதனிடையே, உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் முன் அவற்றின் லேபிள்கள், உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகள், இறக்குமதியாளர் அல்லது விநியோகஸ்தரின் விவரங்கள் ஆகியவற்றை கவனமாகச் சரிபார்க்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், சந்தேகத்திற்கிடமான பொதியிடல் அல்லது கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டிய தகவல்கள் இல்லாத பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத அல்லது நுகர்வோர்களை தவறாக வழிநடத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் அறிந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
