மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று (ஏப்ரல் 19) உத்தியோகப்பூர்வமாக நிறைவடைந்தது.
ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 4,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதில் எஞ்சியிருந்த 145 வீடுகள், இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நிகழ்நிலை (Online) ஊடாக மக்களிடம் கையளிக்கப்பட்டன.
கொவிட்-19 மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியை இந்திய அரசாங்கம் 2.8 மில்லியன் ரூபாவாக அதிகரித்து வழங்கியமையால் இத்திட்டம் வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்துள்ளது.
ஏற்கனவே முதலாம், இரண்டாம் கட்டங்களில் 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிக்கு அமைய, 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் நான்காம் கட்டப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்டப் பகுதிகளில் மொத்தமாக 60,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய அரசாங்கத்தின் பாரிய இலக்கின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
