கடந்த மே மாதம் 28ஆம் திகதி காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டுமாகடை பள்ளிவாசல் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, நேற்று (07) வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகெதர பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது கார் ஒன்றில் வந்த குழுவினர், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர் ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளில், மத்துகம, களுத்துறை, திஸ்ஸமஹாராம, வலஸ்முல்ல மற்றும் மொரவக்க நீதவான் நீதிமன்றங்களால் இவருக்கு எதிராக பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
