இலங்கையின் முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு கொள்கை வடிவமைப்பை ஒரு மாதத்திற்குள் இறுதி செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஜூன் 10ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தேசிய கல்வி ஆணைக்குழு சமர்ப்பித்த கருத்துரு ஆவணத்தை ஆய்வு செய்தபின் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
முன்பள்ளி கல்வி, பொதுக் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, டிஜிட்டல் கல்வி மற்றும் முறைசாரா கல்வி உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய வகையில் கல்வி மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்தது.
முன்னைய கல்வி மறுசீரமைப்புகளின் அனுபவங்களையும் அதிலிருந்து கிடைத்த பாடங்களையும் கருத்தில் கொண்டு புதிய கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கல்வி மறுசீரமைப்புகள் தற்போதைய கல்வி நடவடிக்கைகளை பாதிக்காத வகையில், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்வி அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்கால சமூக சவால்களை எதிர்கொள்ளக்கூடிய குடிமக்களை உருவாக்கும் நோக்கில் புதிய கொள்கை வடிவமைப்பு அமைய வேண்டும் என்பதுடன், ஒழுங்குபடுத்தப்படாத கல்வித் துறைகள் மற்றும் தனியார் கல்வி தொடர்பான கட்டுப்பாடுகளின் அவசியமும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
