தலவாக்கலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள சுமார் 50 ஆண்டுகால பழமையான பலமானது தற்போது ஆபத்தான நிலையில் மக்கள்பாவனைக்கு பொருத்தமற்ற ஒன்றாக காணப்படுகின்றது.
சுமார் 60 அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்ட இந்தப் பாலத்தின் ஊடாக முச்சக்கர வண்டிகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
வைத்தியசாலைகளுக்கு செல்வோர், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்கள் அனைவரும் இந்தப் பாலத்தையே நம்பியுள்ளனர்.
பெயாவெல் தோட்டத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் 1,200-க்கும் அதிகமான மக்கள் இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் ரட்ணகிரி, நானுஓயா மற்றும் பாமஸ்டன் தோட்ட மக்களும் தங்களது போக்குவரத்து தேவைகளுக்காக இந்தப் பாலத்தை நம்பியுள்ளனர்.
இந்நிலையில், அரை நூற்றாண்டைக் கடந்துள்ள இந்தப் பாலம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கட்டமைப்புகள் பல இடங்களில் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. அதேவேளை, பாலத்தின் நடுப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் ஓட்டைகளும் உருவாகியுள்ளன. இதனால் பாலத்தை பயன்படுத்தும் மக்கள் தினமும் உயிர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பாலத்தை புனரமைப்பதற்கான பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இதற்கான தீர்வு கிடைக்கவில்லையென பெயாவெல் தோட்ட மக்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.
