பூனாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம்–கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (18) வியாழக்கிழமை காலை, கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை நிலை குலைந்து கீழே விழுந்ததுடன், பின்னர் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றிய 56 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பூனாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
