இலங்கையில் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக, செல்வச்சந்நிதி ஆலயத்திலும் கதிர்காம ஆலயத்திலும் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்ட இரு வேல்கள் கொண்டு பாதையாத்திரை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த யாத்திரை குழு, நேற்று (17) மட்டு மாமாங்கத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த யாத்திரையில் கதிர்காமத்தைச் சேர்ந்த சிங்கள இனத்தையுடைய அருணன் மற்றும் சங்கரன் அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இரு வேல்களுடன் யாத்திரையை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்கான பாதையாத்திரை நடைபெற்று வருவதுடன், கடந்த 9 ஆண்டுகளாக காட்டுவழி பாதை யாத்திரையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கரன் அடிகளார் தெரிவித்தார்.
இந்த வருடம் இரு ஆலய வேல்களுடனும் யாத்திரை மேற்கொள்வது விசேடமான ஆன்மிக அனுபவமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, கடந்த ஆண்டு நடைபெற்ற பாதையாத்திரை குழுவில் இடம்பெற்ற ஒருவர் தொடர்பாக குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, செல்வச்சந்நிதி ஆலய நிர்வாகம் அந்த குழுவுக்கு ஆலய அனுமதி வழங்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மூலஸ்தானத்தில் வைக்கப்பட்ட முருகவேல் மற்றும் கதிர்காமத்தில் வழங்கப்பட்ட வேல் ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன என சங்கரன் அடிகளார் தெரிவித்தார்.
பக்தர்கள் இந்த புனித யாத்திரையில் இணைந்து இரு ஆலய வேல்களையும் தரிசிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
