உடுப்பிட்டி சந்தி பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலைகள் காரணமாக தினமும் காலை மற்றும் பாடசாலை முடியும் நேரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் பயணிக்கின்ற நிலை காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு வல்வெட்டித்துறை போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கையும் ஒரு காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சில நேரங்களில் பெண்கள் பாடசாலைக்கு முன்பாக மட்டுமே போக்குவரத்து பொலிசார் கடமையில் இருப்பதாகவும், ஆண்கள் பாடசாலைக்கு முன்பாக அவர்களின் கண்காணிப்பு முறையாக இடம்பெறவில்லை என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பொலிசார் கடமையில் இருப்பின் மட்டுமே வாகன ஓட்டிகள் வேகத்தை குறைப்பதாகவும், இல்லையெனில் அதிக வேகத்தில் வந்து விபத்து அபாயம் உருவாகும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
காலை 7.10 மணி முதல் 7.30 மணி வரை குறைந்தது பொலிசார் தொடர்ந்து கடமையில் இருப்பது அவசியம் எனவும், அதேபோல் பாடசாலை விடும் நேரங்களிலும் போக்குவரத்து கட்டுப்பாடு தேவை எனவும் வலியுறுத்தப்படுகிறது.
பாடசாலை நாட்களில் காலை மற்றும் மதிய வேளைகளில் போக்குவரத்து பொலிசார் நிலைத்துக் கடமையாற்றுவதை வல்வெட்டித்துறை போக்குவரத்து பொறுப்பதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என உடுப்பிட்டி பகுதி மக்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, உடுப்பிட்டி சந்தியில் பாடசாலை நேரங்களில் புதிய போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் உடுப்பிட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலை அதிபர்கள், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி, சந்தி ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
