நாட்டின் போக்குவரத்துச் சேவையை மிகவும் திறமையான மற்றும் தரமான நிலைக்குக் கொண்டு வரும் நோக்கில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் 104 மெட்ரோ (Metro) பஸ்களை இறக்குமதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாரயிறுதி நாட்களில் குறைந்த செலவில் குடும்பத்தினருடன் இந்த மெட்ரோ பேருந்துகளில் பயணம் செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
தனக்குத் தேவையான பஸ் பயணிக்கும் வழித்தடம் மற்றும் அது தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் இடம் (Live Location) உள்ளிட்ட தகவல்களை வீட்டிலிருந்தபடியே அவதானிக்க முடியும் என்பது இந்த சேவையின் விசேட அம்சமாகும்.
இதேவேளை, ‘மெட்ரோ பஸ் வீக்கெண்ட் பாஸ்’ (Metro Bus Weekend Pass) பேருந்து சேவையின் மூலம் வாரயிறுதி நாட்களில், சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் 11:59 மணி வரை, ஒருவருக்கு 799 ரூபா கட்டணத்தில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிப்பதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ‘ஃபோட்டான் இன்டர்நேஷனல்’ (Foton International Corporation) நிறுவனத்திடமிருந்து இவ்பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. பஸ்களின் தொழில்நுட்ப நிலைமைகளை ஆராய்வதற்கும், இலங்கையின் வீதி முறைமைக்கு ஏற்றவாறு அவற்றை மேலும் வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்கும் இலங்கை அதிகாரிகள் குழுவொன்று தற்போது சீனாவுக்குச் சென்றுள்ளது. இதற்கமைய, இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இவ்பஸ்கள் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன. கடவத மற்றும் ரத்மலான ஆகிய பகுதிகளில் புதிய மெட்ரோ சேவைக்கான பஸ் நிலையங்கள் (Depots/Yards) அமைக்கப்படவுள்ளன.
இதேவேளை, வாரயிறுதி நாட்களில் குடும்பத்தினருடன் குறைந்த செலவில் மெட்ரோ பஸ்களில் நீண்ட தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. ‘மெட்ரோ பஸ் வீக்கெண்ட் பாஸ்’ என்ற இந்தத் திட்டத்தின் கீழ், ஒருவருக்கு 799 ரூபா கட்டணத்தில் வாரயிறுதி முழுவதும் தேவையான அளவு பயணங்களை மேற்கொள்ள முடியும்.
இதில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாகப் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ‘LMT Go’ செயலி (App) மூலம் இந்த வீக்கெண்ட் பாஸை (Weekend Pass) பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
