தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவில் பணியாற்றும் பெண் வைத்தியர் தாக்கல் செய்த வழக்கில், யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (19) முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
தமக்கு தொந்தரவு விளைவிக்கும் வகையிலும், கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்திலும் சமூக ஊடகங்கள் ஊடாக தவறான மற்றும் அவதூறான தகவல்கள் பரப்பப்படுகின்றன எனக் குறிப்பிட்டு, குறித்த பெண் வைத்தியர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தீர்ப்புக்காக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் நீதிவான் நஜ்மி ஹூசைன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அர்ச்சுனா எம்.பி. சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் கருத்து வெளியிடும் சுதந்திரம் அவருக்கு உண்டு என நீதிமன்றத்தில் வாதிட்டார்.
எனினும், அந்த வாதத்தை நிராகரித்த நீதிவான், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அல்லது சாதாரண பிரஜையாக இருந்தாலும், பேச்சுச் சுதந்திரத்திற்கு சட்டரீதியான வரம்புகள் உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
எந்தவித ஆதாரங்களும் இன்றி ஒரு மருத்துவ அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவோ அல்லது அவர் ஊழலில் ஈடுபட்டதாகவோ குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவதூறு பரப்புவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் நீதிவான் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு எதிராக இனிமேல் சமூக ஊடகங்கள் அல்லது வேறு எந்த வழிகளிலும் அவதூறான மற்றும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கக் கூடாது என்றும், இதுவரை வெளியிடப்பட்ட அவதூறு மற்றும் தவறான தகவல்களைக் கொண்ட அனைத்து காணொளிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் அர்ச்சுனா எம்.பி. சார்பில் சட்டத்தரணி கௌசல்யா முன்னிலையாகி ஆஜரானார்.
