சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்பு போராட்டம் அர்த்தமற்றது. குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லையென சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, வாயினால் உண்பதைத் தவிர்த்தாலும், அவருக்குத் தேவையான போஷாக்குகள் குருதி மூலமாகவும், குழாய் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. வாயினால் உண்பதை மட்டுமே அவர் தவிர்த்துள்ளாரே தவிர, பிற வழிகளில் போஷாக்கு பெறுவதைத் அவர் தவிர்க்கவில்லை.
ஒருவர் 12 அல்லது 13 நாட்கள் உணவின்றி இருந்தால், அவரால் இயல்பாக இருக்க முடியாது. எனவே, அவர் தற்போது மேற்கொண்டு வரும் செயல் அர்த்தமற்ற ஒன்றாகவே நான் கருதுகிறேன். சுரேஸ் சலே ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானி மற்றும் அரச அதிகாரியாவார்.
எனவே, குற்றவாளிகளுக்கு உதவியாக அல்லது அவர்களைப் பாதுகாப்பதாகச் செயற்படாமல், தனக்குத் தெரிந்த உண்மைகளைத் தகுந்த அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதே முறையானதாகும்.
அவர் உண்மையை வெளிப்படுத்தினால், அது நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கக்கூடாது என்றார்.
