இந்துசமுத்திரத்தில் MJO அலையின் கிழக்கு நோக்கிய வருகை மற்றும் கிழக்கிந்திய நிலப்பரப்பில் ஆந்திரா அருகே நிலவும் மேலடுக்கு சுழற்சியின் விளைவாக தென்மேற்கு பருவக்காற்றானது மீண்டும் தூண்டப்பட்டு, அரபிக்கடலில் உருவாகும் மழைமேகங்கள் இலங்கை, இந்திய நிலப்பகுதிகளை நோக்கி பயணிக்கக்கூடிய சாதகத்தன்மை உருவாகியுள்ளது.
இதன் விளைவாக, தென்னிந்தியாவின் கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை அண்மித்த மாவட்டங்கள், இலங்கையின் காலி முதல் புத்தளம் வரையான மேற்கு கரையோர மாவட்டங்கள், இரத்தினபுரி உள்ளடங்கலாக மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி பரவலடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பருவக்காற்றானது தொடர்ந்தும் 30-40கிமீ என்ற வேகத்தில் வீசுவதோடு, அதிகரித்து காணப்பட்ட வெப்பநிலையில் வீழ்ச்சியும் சில நேரங்களில் மேகமூட்டத்துடனான வானிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை அவ்வப்போது காற்றின் வேக மாறுபாடு மற்றும் காற்று முறிவு காரணமாக சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் சாதாரண அளவிலான மழைவீழ்ச்சியும் பதிவாகக்கூடும்.
எல்-நினோ உருவாக்கம் மற்றும் அதன் விளைவாக தென்மேற்கு பருவமழை பொய்த்து வறட்சி ஏற்படுமென கவலை தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த MJO அலையின் தற்போதைய படிநிலையானது பருவகாலத்தின் மழைவீழ்ச்சியை இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் சராசரிக்கு அண்மித்ததாகவும், கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் சராசரிக்கு மேலாகவும் தூண்டக்கூடுமென கணிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அரபிக்கடலின் மேற்கு பகுதி இன்னும் 28°C என்ற மிதமான வெப்பநிலையிலேயே காணப்படுவதால், இந்த மழை நிலைமை இம்மாத இறுதிவரை மட்டுமே தொடரக்கூடும் என்பதோடு;
வருகின்ற ஜூலை நடுப்பகுதிக்கு பின்னர் அரபிக்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை மேலும் 2-3°C அளவிற்கு வெப்பமேற்றப்பட்டு, Positive IOD நிலை உருவாவதன் மூலம் எல் நினோவின் பிடியில் இருக்கப்போகும் தென்மேற்கு பருவகாலத்தின் இறுதி இரண்டு மாதங்கள்கூட சராசரியை அண்மித்த மழைவீழ்ச்சியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.!
