நாடு முழுவதும் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, 14 மாவட்டங்களில் உள்ள 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேல் மாகாணமே டெங்கு பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதானப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகர சபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதி, மஹரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொடஉயன மற்றும் கொதடுவ உள்ளிட்ட பல பகுதிகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, சீதுவை, களனி, ராகம, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கட்டான மற்றும் மஹர உள்ளிட்ட பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் அபாய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, ஹொரணை, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வாத்துவ, களுத்துறை மற்றும் பயாகல பகுதிகளும் டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், புத்தளம், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இந்த அதி அபாயகர பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள நீர் தேங்கும் இடங்களை அப்புறப்படுததி நுளம்பு பெருக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
