குருநாகல் – கொட்டவெஹர பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு சோதனையின் போது பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட காட்சிகளை உள்ளடக்கிய காணொளியை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் பல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காணொளியைப் பதிவு செய்து, அதனை சமூக ஊடகங்களில் பரப்பிய சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து நபர்களை அடையாளம் காண மேற்காள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நிக்கவெரட்டிய பொலிஸ் குழுவினரால் செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் 16 ஆம் திகதி, கொட்டவெஹர பொலிஸார் பல்கொல்ல பகுதியில் நடத்திய சோதனையின் போது, சிறிய அளவிலான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 19 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேகநபர்களைக் கைது செய்த சம்பவத்துடன் இது தொடர்புடையதாகும்.
மஹாஉஸ்வெவ பகுதியைச் சேர்ந்த அந்த இரு சந்தேகநபர்களும் மே 17 ஆம் திகதி நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர், மே 21 ஆம் திகதி அன்று அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, தலா 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
இருப்பினும், அவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து குடியிருப்பாளர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி, அதிகாரிகளைத் தடுத்துஅந்த மோதலைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் இந்தக் காணொளி, தெரணியாகலை பொலிஸ் பிரிவில் நடந்த சம்பவத்துடன் தவறாகத் தொடர்புபடுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, காணொளியைப் பரப்பிய ஏனைய நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
