நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 50,000-ஐ கடந்துள்ளது. இதுவரை டெங்கு காய்ச்சலால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் தரப்புகள் தெரிவிக்கின்றன.
நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக சில மருத்துவமனைகளில் நோயாளி திறன் வரம்பும் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில், 600 கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல பகுதிகளில் டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரை சுற்றுவட்டாரத்தில் உள்ள பெய்ரா ஏரியை சுத்தம் செய்யும் சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது இராணுவத் தளபதியின் தலையீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன், ஹுனுபிட்டிய கங்காராமாதிபதி ஆச்சார்ய பூரண்ய பூஜ்ய கிரிந்தே அஸ்ஸஜி ஸ்வாமிநாதரும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டார். சுற்றுச்சூழல் காவல்துறையின் ஆதரவும் இதில் பெறப்பட்டுள்ளது. ஏரி சுற்றுவட்டாரக் குப்பைகள் அகற்றும் பணியும் இடம்பெற்று வருகிறது.
இதே “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் கண்டி கந்தலே பகுதியில் மேலும் ஒரு சுத்திகரிப்பு வேலைத்திட்டமும் நடைபெற்றது. இதனை கந்தலே விவசாய சேவை மையம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பொதுமக்களும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
கண்டி மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தலைமையில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில், பிரதேச அபிவிருத்தி மற்றும் சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.
மேலும், போசன் காலத்தில் தானசாலைகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை குறைத்தால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
டெங்கு தொற்றை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரிக்கவும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
