பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இலங்கையில் முதன்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சிசு செரிய’ பாடசாலை பேருந்து சேவை யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ. சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சேவையை தொடங்கி வைத்தனர். சாவகச்சேரி பிரதேச செயலாளர், அதிகார சபையின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பல போக்குவரத்து சங்க பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தனிப்பட்ட போக்குவரத்து வசதியாக நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படுகிறது.
தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் இரண்டு பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. உசனிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் உசனிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, மாணவர் விவரங்கள் மற்றும் பெற்றோரின் கைபேசி எண்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் டிஜிட்டல் அட்டை வழங்கப்படுகிறது. பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் போது அட்டை ஸ்கேன் செய்யப்படுவதன் மூலம் அந்த தகவல் உடனடியாக பெற்றோரின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் பயண பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
