தற்போது சிறுவர்களிடையே டெங்கு நோய் பரவும் போக்குக் காணப்படுவதாகவும், இந்நோயினால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்குப் பிற்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, டெங்கு நோய் காரணமாகக் பிள்ளைகளுக்குப் பிற்காலத்தில் மூளைப் பாதிப்புகள், தசை மற்றும் எலும்புகளில் கடுமையான வலி, அத்துடன் இதயப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக டெங்கு நோய் ஏற்பட்டு ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்போது, குழந்தை குணமடைவதற்கான அறிகுறிகளாக பசியின்மை நீங்குதல், புன்னகைத்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படும். எனினும், இவ்வாறான குணமடைவதற்கான அறிகுறிகள் தென்படாமல் குழந்தைக்குத் தொடர்ந்து காய்ச்சல் நீடிக்குமாயின், அது ‘HLH’ எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டுடன் தொடர்புடைய காய்ச்சலாக இருக்கலாம் என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதுடன், பிள்ளைகளை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாப்பதற்காக மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வீட்டின் ஜன்னல்களை மூடி வைப்பதற்கும், பிள்ளைகளுக்கு நீண்ட கைகளுடைய சட்டைகள் மற்றும் நீண்ட காற்சட்டைகளை அணிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியர் இங்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், டெங்கு நோய் இன்னும் உயிருக்கு ஆபத்தானதாகவே காணப்படுவதால், இது குறித்துத் தீவிர கவனம் செலுத்துமாறு வைத்திய நிபுணர் தீபால் பெரேரா மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
