எதேச்சாதிகார, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியற்ற உண்மையான ஜனநாயக நாட்டிற்காக அரசியல் பேதமின்றி ஒன்றிணைவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
“இலங்கை சிவில் சமூகங்களின் பயணப் பாதை” எனும் தொனிப்பொருளில் இலங்கையில் அமைந்து காணப்படும் சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைக்கும் விசேட நிகழ்வொன்று இன்று (6) கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
சமகாலத்தில் ஜனநாயகம் வலுப்பெறுவதற்குப் பதிலாக, ஜனநாயக வழிமுறைகளும் விழுமியங்களும் சீர்குலைந்து, சீர்குலைக்கப்பட்டு வருகின்ற ஒரு தருணத்தில், ஜனநாயகத்திற்குப் பதிலாக சர்வாதிகாரத்தையும் எதேச்சாதிகாரத்தையும் தனிக் கட்சி ஆட்சியையும் முன்னிறுத்தும் செயற்பாட்டாளர்களுக்கு மத்தியில், நாட்டில் உள்ள சிவில் சமூக அமைப்புகளை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மிகப்பெரிய பிணைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டே இச்சந்திப்பு நடத்தப்படுகின்றது.
