மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் இன்று (08) நடைபெற்றது.
பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலையகப் பகுதிகளில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இதன்போது, மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.
மக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றும், அவற்றின் சாதகமான பலன்கள் மக்களிடம் வெளிப்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மலையக மக்களின் முன்னேற்றமே தமது முதன்மை நோக்கம் என்றும், மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மலையகத்தின் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பு, மலையக அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய கலந்துரையாடலாக அமைந்தது.
