அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணப் பரிவர்த்தனையின் போது, காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களின் செயல்பாட்டுத் தோல்விகளைப் பயன்படுத்தி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பொதுப்பணம் சைபர் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா சபையில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான விசேட நிதிக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (10) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பர் முதல் 2026 ஜனவரி வரையிலான காலப்பகுதியில், அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகையின் போதே இந்த சைபர் திருட்டு அரங்கேறியுள்ளது. இதனால் பொது திறைசேரிக்கு 2.5 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு அரச நிறுவனங்களுக்குள் ஏதேனும் உள்வீட்டுத் தொடர்புகள் அல்லது கூட்டுச் சதித்திட்டங்கள் இருந்ததா என்பதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) உள்ளிட்ட சட்ட அமுலாக்கப் பிரிவினரே விசாரிக்க வேண்டும் என ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
