ராகலை நடுக்கணக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு மீண்டும் அதே காணி மற்றும் வீடுகளை வழங்குவதில் எந்தச் சட்டத் தடையும் இல்லை என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா. ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளாக தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வசித்து வந்த இந்தக் குடும்பங்கள், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டமை மலையக மக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
தங்களது சொந்த நிதியில் வீடுகளை அமைத்த குடும்பங்கள் தற்போது நிர்க்கதியான நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் காணியை மீண்டும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே வழங்குவதற்கு சட்டரீதியான தடையில்லை என சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே, மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீண்டும் காணியும் வீடுகளும் வழங்க அரசாங்கமும் காணி அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
