2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சாதனை அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் மூன்று மாத காலப்பகுதியில், மதுவரி வருமானம் 70.4 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இக்காலப்பகுதிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 61.95 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை விட இது 113.6% அதிகமாகும்.
கடந்த 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருமானம் 114.8% வளர்ச்சியைக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனை வருமானம் குறித்து மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. என். ஏ. பேமரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,
மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் வடிசாலைகளை தொடர்ந்து கண்காணித்தல், மதுபான போத்தல்களில் பாதுகாப்பு முத்திரைகளை இடுதல், சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு எதிரான சுற்றிவளைப்புகளை அதிகரித்தல் மற்றும் அனுமதிப்பத்திர இடங்களை முறையாக ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த வருமான வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரச வருவாயை ஈட்டும் நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள மதுவரித் திணைக்களம், 2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் 245 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் வழிகாட்டல் மற்றும் அதிகாரிகளின் அர்ப்பணிப்புடன் இந்த இலக்கை எளிதில் அடைய முடியும் எனத் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
