நாட்டில் மனித செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக 04 மாதங்களில் 108 யானைகள் உயிரிழந்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், மொத்தம் 143 உயிர்கள் பறிபோயுள்ளன.
இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 108 யானைகள் உயிரிழந்துள்ளன. அதேபோல யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி 35 பேர் உயிரிழந்துள்னனர்.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின்படி, யானைகளின் மரணங்களுக்குப் பின்வரும் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன:
16 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளன. சட்டவிரோத மின்சார வேலிகளில் சிக்கி 14 யானைகள் உயிரிழந்துள்ளன.
உணவுப் பொருட்களில் மறைத்து வைக்கப்படும் வெடிபொருட்களை உட்கொண்டதால் 09 யானைகள் உயிரிழந்துள்ளன. புகையிரதத்துடன் மோதியதில் 05 யானைகள் உயிரிழந்துள்ளன.
ஏனைய மரணங்கள் இயற்கை காரணங்களினாலோ அல்லது இனம் காணப்படாத காரணங்களினாலோ ஏற்பட்டுள்ளன.
இறந்த யானைகளில் பெரும்பாலானவை இளம் குட்டிகள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அத்துடன், அதிகளவான யானை இறப்புகள் கிழக்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மோதலைக் கட்டுப்படுத்தவும், மனித மற்றும் யானை உயிர்களைப் பாதுகாக்கவும் முறையான வேலைத்திட்டங்கள் அவசியமெனச் சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
