சர்வஜன அதிகார கட்சியின் மே தினப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (01) கொழும்பில் நடைபெற்றது. இதன் போது நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் என சர்வஜன அதிகார கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நான் மஹிந்த ராஜபக்ஷவின் சீடர் என்பது அனைவருக்கும் தெரியும். மஹிந்த ராஜபக்ஷவிடம் காணப்பட்ட அதே தேசியவாதக் கொள்கைகள் இன்று திலித் ஜயவீரவிடம் மட்டுமே இருக்கின்றது. இந்த தேசியவாதத்தை மதிக்கின்ற ஒரு தலைவரை வெற்றிபெறச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தற்போது எந்தவொரு அரசியல் கட்சியிலும் இத்தகைய தேசியவாதத் தலைமை இல்லை. அந்த தலைமைத்துவத்தை சர்வஜன அதிகார கட்சி மாத்திரமே கொண்டிருக்கிறது. மேலும் அடுத்ததாக அரச அதிகாரத்தை கைப்பற்றும் கட்சி சர்வஜன அதிகார அமைப்பாகும். அதன் மூலம் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீர பதவியேற்பார் என்பதை இந்த மே தினத்தில் உறுதியாக கூறுகின்றேன், என குறிப்பிட்டார்.
