நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகலை – புத்தளம் வீதியில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கார் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருணாகலை நகருக்கு அருகில் புத்தளம் வீதியில் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பம் மற்றும் தொலைபேசி கம்பம் என்பவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் யக்வில பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபொக்குண பகுதியில் சனிக்கிழமை (02) காலை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபத்திலிருந்து வாரியப்பொல நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மற்றும் லொரி ஆகியவற்றுடன் மோதியதுடன், வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த பாதசாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிரிமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
