உயிரிழந்த நிதி அமைச்சின் அதிகாரி ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டதாக தான் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மை என்றும், அதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ கடித ஆதாரத்துடனேயே தான் முன்வைத்ததாகவும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்கம் என் மீது சுமத்தும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சப்போவதில்லை. எதிர்வரும் 9ஆம் திகதி குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் சாட்சியங்களுடன் முன்னிலையாகத் தயாராகவுள்ளேன். அரசாங்கத்தின் பதிலளிக்க முடியாத கேள்விகளை எழுப்புவதாலேயே என்னை சிறையில் அடைக்க ஒன்பதாவது முறையாக முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதன்கிழமை (6) கொழும்பு – டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ‘மக்களின் குரல்’ ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
ரங்க ராஜபக்ஷவின் மனைவியே மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்தார் என்று ஆதாரத்துடனேயே நான் கூறினேன். செவ்வாயன்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ரங்க ராஜபக்ஷவின் மரணம் சந்தேகத்திற்குரியது என அவரது மனைவி அறிவித்ததாக நான் கூறிய கருத்து பொய்யானது என்றும், இது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக என்னை குளியாப்பிட்டிய பொலிஸிற்கு அழைக்கவுள்ளதாகவும், பின்னர் குளியாப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
