நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஈடுப்பட்டுள்ள இரு பிரதான நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாஃப் இடையில் பாரிய விலை வேறுபாடு மற்றும் தன்னிச்சையான விலை அதிகரிப்புகள் பொதுமக்களை பாரிய அசெளகரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக லிட்ரோ நிறுவனம் விலையை அதிகரிக்காத சந்தர்ப்பங்களில் கூட லாஃப்ஸ் நிறுவனம் உலக சந்தையில் விலை அதிகரிப்பை காரணம் காட்டி தன்னிச்சையாக விலைகளை உயர்த்துவது நுகர்வோரை ஏமாற்றும் செயலாகும்.
இந்நாட்டில் எரிவாயு விலையை முறைப்படுத்துவதற்கான முறையான பொறிமுறை ஒன்று இல்லாமையே இவ்வாறான குளறுபடிகளுக்கு காரணம். அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கும் போது மாத்திரமன்றி, விலை குறையும் போதும் அதன் நன்மைகள் நுகர்வோருக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த ஒரு சுயாதீன ஒழுங்குமுறையை உருவாக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் இந்த எரிவாயு நிறுவனங்களின் தன்னிச்சையான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முன்வரவில்லை.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமாவது நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த விலை முரண்பாடுகளைக் களைந்து, முறையான நியாமான விலைக்கட்டுப்பாட்டுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றார்.
