வறுமை காரணமாக தனது மகனுக்கு சிறந்த கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெற்றோரால் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் ஒப்படைக்கப்பட்ட 10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட விகாராதிபதிக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதனையடுத்து, குற்றவாளியான பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால், மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாகியுள்ளதால், அவர் ஆஜராகாத நிலையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
