யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டவரின் உடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று மாலை நடத்தப்பட்டது.
இவர் தன்னை தானே, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், உடலில் எந்தவிதமான சந்தேகத்திற்குரிய காயங்களும் இல்லை என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையின் பின்னர், உறவினர்கள் உடலத்தை ஏற்க மறுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அரச செலவில் உடலத்தை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, மரண தண்டனை கைதியான, பூபாலசிங்கம் ஜெயக்குமார் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா, கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
