ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேனவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத நடத்தைகளில் ஈடுபட்டதாகக் கூறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகத்தை பதவியிலிருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கோரிக்கை விடுத்துள்ளது.
கபில சந்திரசேனவுக்கு தகுதியற்ற பிணையாளர்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறி, அவரது பிணையை ரத்து செய்து மீண்டும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் விடுத்த கோரிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது.
ஆரம்பத்தில் சந்திரசேனவினால் முன்வைக்கப்பட்ட இரு பிணையாளர்கள் நீதிமன்றப் பதிவாளரால் நிராகரிக்கப்பட்டனர். அதன் பின்னர், சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இரு புதிய பிணையாளர்களை ஆஜர்படுத்தியே அவர் பிணை பெற்றுக்கொண்டார்.
ஆனால், நிராகரிக்கப்பட்ட பிணையாளர்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தவறாகக் கருதியே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இதற்கு முன்னர் கபில சந்திரசேனவை மிரட்டியுள்ளார். “தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு உங்களைத் தள்ளுவேன்” என அவர் சந்திரசேனவிடம் கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பணிப்பாளர் நாயகத்தின் இந்த தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான செயல்பாடுகள் குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது பதவி நீக்கம் குறித்து நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைக்க ஏன் தயங்குகிறீர்கள் என சாகர காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையில் அரசியல் செல்வாக்குகள் ஏதேனும் தாக்கம் செலுத்துகின்றதா என்ற சந்தேகமும் இதன் மூலம் எழுந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
