யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருநகர் – சென்.பற்றிக்ஸ் வீதியை சேர்ந்த 62 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குருநகர் பகுதியிலிருந்து கடந்த 25ஆம் திகதி கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.
அது தொடர்பில் குடும்பத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், காணாமல்போனவரை தேடும் பணியில் சக தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று புதன்கிழமை (27) மாலை புங்குடுதீவு 3ஆம் வட்டார பகுதி, கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணைகளின் அடிப்படையில், குருநகர் பகுதியில் இருந்து தொழிலுக்கு கடலுக்கு சென்றவரே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
