மட்டக்களப்பு நகரில் முச்சக்கர வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்று சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரின் தங்க ஆபரணங்கள், பணம் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர். முச்சக்கர வண்டி சாரதி ரிதிதென்னை காட்டு பகுதியில் மயங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (28) சாரதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் சிறிய வைத்தியசாலை முன்பாக உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்து வாடகைக்கு சவாரி செய்துவரும் பூநொச்சி முனையைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் சம்பவ தினமான நேற்று இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வருவதாக உறவினருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்து குறித்த முச்சக்கர வண்டியை ஒருவர் வாழைச்சேனை வரை செல்வதற்காக வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்றுள்ள நிலையில் இரவு 11.00 மணியாகியும் வீடு திரும்பாததையடுத்து முச்சக்கர வண்டி சாரதியின் உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (28) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதி தென்னை காட்டு பகுதியை அண்டிய பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் சாரதி ஒருவர் மயங்கி கிடப்பதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் மயக்கத்தில் கிடந்த சாரதியை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி சென்று அவருக்கு மயக்க மருந்து தெளித்து அவரின் ஒரு பவுன் தங்க மோதிரம், பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுவிட்டு அவரை காட்டு பகுதியில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மட்டு தலைமையக மற்றும் வாழைச்சேனை பொலிசார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
