ஜப்பானின் டோக்கியோவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச தீவு நாடுகளின் பெருங்கடல் மாநாட்டில் (Island States Ocean Summit – ISOS) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்நிலைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 35 தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், காலநிலை மாற்றம், கடல் மாசுபாடு, அதிகப்படியான மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை இழப்பு போன்ற உலகளாவிய சவால்களை சமாளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள தீவு நாடாகிய இலங்கையின் பொருளாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடலுடன் நெருக்கமாக இணைந்துள்ளதை இலங்கை பிரதிநிதிகள் இங்கு வலியுறுத்தினர். அதனால், நவீன மீன்பிடி தொழில்நுட்பங்கள், செயற்கைக்கோள் கண்காணிப்பு முறைமைகள் மற்றும் அறிவியல் தரவு பரிமாற்றம் போன்ற துறைகளில் முன்னேறிய நாடுகளின் ஒத்துழைப்பு வளர்ந்து வரும் தீவு நாடுகளுக்கு மிகவும் அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டது.
இலங்கை அரசு தற்போது அறிவியல் அடிப்படையிலான கடற்றொழில் மேலாண்மையையும், “நீல பொருளாதாரம்” (Blue Economy) அணுகுமுறையையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதேவேளை, மாங்குரோவ் காடுகள், பவளப்பாறைகள் மற்றும் கடல்சார் உயிரியல் வளங்களை பாதுகாப்பதிலும், சிறு அளவிலான மீனவர்கள், பெண்கள் மற்றும் கரையோர இளைஞர்களை வலுப்படுத்துவதிலும் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் ஊடாக ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் புதிய தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிதி ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கான இருதரப்பு கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. இவை இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல் வள துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் முக்கிய முன்னேற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
