கென்யத் தலைநகர் நைரோபியிலிருந்து மேற்கே சுமார் 120 கிலோமீட்டர் (77 மைல்) தொலைவில் உள்ள கில்கில் பகுதியில் அமைந்துள்ள விடுதிப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இக்கோர விபத்தில் மேலும் பல மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 79 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன், 7 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கில்கில் பகுதியில் உள்ள ‘உடுமிஷி மகளிர் அகடமி’ பாடசாலையில் , வியாழக்கிழமை அதிகாலை மாணவிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 01:00 மணியளவில் சுமார் 220 மாணவிகள் தங்கியிருந்த விடுதித் தொகுதி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளை மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்ட நிலையில், கென்ய செஞ்சிலுவைச் சங்கத்தின் அவசரக்கால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து உதவி வழங்கி வருகின்றனர். எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
