நாடு தற்போது எதிர்கொண்டுள்ள சவாலான சூழ்நிலையைப் பயன்படுத்தி, இலங்கையை வெளிநாட்டுச் சக்திகளின் புவிசார் அரசியல் விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திஸ்ஸமகாராம பிரதேசத்தில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்று எமது நாடு பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பாரதூரமான பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சுருங்கி, வருமான வழிகள் இழக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய ஆபத்தான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டை புவிசார் அரசியல் விளையாட்டு மைதானமாக மாற்றியமைப்பதற்கு பல தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர்.
பல்வேறு சக்திகளின் தேவைகளுக்கேற்ப நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. அடிமைத்தனத்திலிருந்து நாம் முழுமையாக விடுபட வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம், நமது அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்து, நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல நாம் அனைவரும் அர்ப்பணிப்போடு நடந்து கொள்ள வேண்டும். நமது நாட்டிற்கே உரித்தான பலமான பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார நிலைப்பாட்டை கட்டியெழுப்பி, அனைத்து துறைகளிலும் ஒரு நாடாக நாம் வலிமை பெற வேண்டும் என்றார்.
