காத்தான்குடி நகரசபையின் தற்போதைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது, காத்தான்குடிக்கு ஜனாதிபதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.எம்.ஏ ஹிஸ்புல்லாவா? அல்லது இந்த நகரசபை இலங்கை நாட்டிற்குள் தான் உள்ளதா? என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு ‘வொய்ஸ் ஒப் மீடியா’வில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில், நகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஏ.எம்.ஏ. பர்சாத் , எம்.எப்.எம். கலீல் பாரி மற்றும் ஜுனைட் முஜீப் ஆகியோர் ஒன்றிணைந்து தவிசாளரின் ஊழல் மற்றும் ஜனநாயக விரோதப் போக்குகளைப் பட்டியலிட்டனர்.
சுற்றுலா அமைச்சினால் வழங்கப்பட்ட 4 மில்லியன் ரூபா பெறுமதியான படகுகள், முறையான அனுமதியோ, நீச்சல் பயிற்சி பெற்ற சாரதிகளோ இன்றி இயக்கப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்ட படகு விபத்தில் 30 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். இதுகுறித்து முகநூலில் பதிவிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக, “நகரசபை வருமானம் குறைந்துவிட்டது” எனக் கூறி தவிசாளர் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
அண்மைய படகுச் சேவை தொடக்க விழாவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல், மண்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கும், புதிய சுற்றுநிருபத்தை மறைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தவிசாளர் அழைப்பு விடுக்கவில்லை.
மத்திய கல்லூரி மைதான விவகாரத்தில், சபை அமர்வில் ஒரு தீர்மானத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு, உத்தியோகபூர்வ கூட்டறிக்கையில் “மைதான சுவரை உடைத்து வாகன தரிப்பிடம் அமைப்பது” என தவிசாளர் தன்னிச்சையாக மாற்றியுள்ளார்.
20 வருடங்களாக மோசமான நிலையில் உள்ள காத்தான்குடி ஜாமில் உல்லா வீதியைத் தனியார் நிதியுதவியுடன் புனரமைக்கக் கொண்டுவரப்பட்ட பிரேரணையைத் தவிசாளர் நிராகரித்துள்ளார்.
இலங்கை நாட்டிற்கு ஒரு சட்டமும் காத்தான்குடிக்கு ஒரு சட்டமும் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த விவகாரத்தில் ஜனாதிபதியும் உயர் அதிகாரிகளும் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
