மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில், களத்தடுப்பை தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 66 ஓட்டங்களையும் பெற்று சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.
304 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் ஷாய் ஹோப் 56 ஓட்டங்களையும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 10 ஓவர்கள் பந்துவீசி 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
