வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹரா – 2026 ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பெரஹராவை சிறப்பாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு, தயார்நிலை மற்றும் தற்போதைய ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பெரஹராவுக்கான ஆதரவை வழங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் நிதி அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பெரஹராவைக் காண வருகை தரும் பக்தர்களுக்கான குடிநீர், மின்சாரம், சுகாதார வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் யானைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கண்டி எசல பெரஹராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அரசாங்கம் தேவையான அதிகபட்ச ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.
இம்முறை கும்பல் பெரஹரா ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் திகதி வரையும், ரந்தோலி பெரஹரா ஆகஸ்ட் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இறுதி மகா ரந்தோலி பெரஹரா ஆகஸ்ட் 27ஆம் திகதி இரவு நடைபெறவுள்ளதுடன், ஆகஸ்ட் 28ஆம் திகதி “திய கெப்பீம” சம்பிரதாய நிகழ்வைத் தொடர்ந்து பகல் பெரஹராவுடன் நிகழ்வு நிறைவடையும்.
