பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை, விசேட மருத்துவக் குழுவொன்றின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தி, அறிக்கை ஒன்றை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை மீதான கட்டளை எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (04) அறிவித்தார்.
சுரேஷ் சலே சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று இன்று (4) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இதனைத் தெரிவித்தார்.
தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் சுகாதார நிலைமை குறித்துப் பரிசோதிப்பதற்காக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஊடாக விசேட சட்ட மருத்துவக் குழுவொன்றை நியமிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக விடயங்களை முன்வைத்த மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, சந்தேகநபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, தனது சேவை பெறுநர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதன் பின்னர் பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகிய நோய்நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிரை மாய்த்துக் கொள்ளும் போக்குக் காணப்படுவதாகவும், அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்குப் பொருத்தமான சூழலை ஏற்படுத்தித் தருமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
