அத்துருகிரிய பகுதியில் நேற்று (04) வியாழக்கிழமை இரவு முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்துருகிரிய – மாலம்பே வீதியில், அத்துருகிரிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்னால் அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, அதில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 53 வயதுடைய அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
