ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான மரண விசாரணை இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் பஸன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த மரண விசாரணை தொடர்பான 19ஆவது மற்றும் 20ஆவது சாட்சியாளர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் அவரது உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் சாட்சியமளிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை ஜூன் மாதம் 2ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் பஸன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
மரணித்த கபில சந்திரசேனவுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோருக்கு, இந்த மரண விசாரணையில் சாட்சியமளிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அறிவித்தல் விடுத்திருந்தனர்.
இந்த அறிவித்தலுக்கு அமைய அவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோரின் உரிமைகள் சார்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உட்பட பல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, இந்த மரண விசாரணைக்காக 19ஆவது மற்றும் 20ஆவது சாட்சியாளர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன மற்றும் அவரது உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோரை நீதிமன்றத்திற்கு அழைத்து சாட்சியம் பெறுவது அவசியமா இல்லையா என்பதை நீதவான் பரிசீலிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இது குறித்த தீர்ப்பை ஜூன் 2ஆம் திகதி வழங்குவதாக நீதவான் இதன்போது அறிவித்தார்.
