ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.எட்டியுள்ளது. இந்நிலையில் ராஜபக்ஸ குடும்பம் என்ன செய்வது என்று பீதியடைந்த நிலையில் தடுமாறுகன்றனர். எதிர்கட்சியினரும் அவர்களுக்கு உடந்தையாக மௌனிகளாக இருக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் குண்டு தாக்குதலன் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் தங்களை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
இதற்கும் மேலாக, ரஞ்சித் மத்தும பண்டார, ஞானசார தேரர் உட்பட பலரும் இணைந்து ஒன்றிணைந்து எதிர்கட்சியினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். இருந்தாலும், மக்களிடையே ஒரு சினிமா பாணியிலான நடிப்பைக் காட்டுவதற்காகவே இத்தகைய செயல்பாடுகளைச் செய்கிறார்கள்.
குறிப்பாக தங்களுடைய அரசியல் நாடகத்தை அரங்கேற்றும் தற்காக மேற்கெள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதல் மூலமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. அத்தோடு இதன் விசாரணையானது நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டது. இந்த அநீதிக்கு நிச்சயமாக எங்களது அரசாங்கம் மற்றும் சட்ட ரீதியாகத் தீர்ப்பு வழங்க இருக்கின்றோம்.
அதேவேளையில், பீதியடைந்த இக்குழுவினர் குறித்த விசாரணையைக் குழப்பும் வகையில் பல்வேறுபட்ட முயற்சிகளைச் செய்து வருகின்றார்கள். நிச்சயமாக அவர்களது முயற்சிகள் பலனளிக்கப் போவதில்லை.
எதிர்க்கட்சியினருக்கு எழுப்பப்படும் கேள்விகள் நான் ஒன்றைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் மக்களுக்காக அரசாங்கத்தை அமைக்க முற்படுகிறீர்களா? அல்லது உங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்காக, உங்களுடைய கூட்டாளிகளையும், கடந்த காலங்களில் மக்களுக்கு எதிராக அநீதி இழைத்தவர்களையும் காப்பாற்றுவதற்காகக் கூடுகிறீர்களா?
நிச்சயமாக மக்கள் அனைத்தையும் அறிவார்கள். உங்களுடைய போலி நாடகங்கள் எடுபடப் போவதில்லை. விரைவாக இந்த விசாரணைக்குரிய தீர்ப்புகள் வெளிவரும் போது, வெட்டவெளிச்சமாக அனைத்துக் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்குரிய தண்டனையை எங்களது அரசாங்கம் வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இவர்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இப்படிச் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சியினர் விசாரணையைக் குழப்புகின்ற நடவடிக்கையை ஏற்படுத்துகின்ற போதும், வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.
ஈஸ்டர் புனித தினத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்குரிய தண்டனைகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொடுக்கத் தான் போகிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, எஞ்சியிருப்பவர்களும் தங்களைத் தாங்கள் திருத்திக் கொண்டு மக்கள் பணியைச் சரியான முறையில் செய்ய முயற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
